சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த எக்ஸ்பிபி மற்றும் எக்ஸ்பிபி 1.1.6 வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 5 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தியேட்டர், மால்கள், மருத்துவமனை, பேருந்து நிலையம் , பூங்காக்கள், உணவகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.