கொடநாடு வழக்கு விசாரணை 9 -ம் தேதிக்கு ஒத்திவைப்பு…
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ஒரு கோடி 10 லட்ச, மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து , மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறி, நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கும்படி வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால், ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான குழு அகமதாபாத்தில் முகாமிட்டுள்ளது.
ADVERTISEMENT
கனகராஜ், சயான் உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்கள், வாட்ஸ் ஆப் பரிமாற்ற விவரங்கள் அகமதாபாத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9 – ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, முக்கிய குற்றவாளிகளான சயான், வளையார் மனோஜ்குமார், உதயகுமார் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.