ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி திட்டம்..! முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கம்..!
ஆன்லைன் மூலம் கட்டட அனுமதியை உடனே வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கப்படவுள்ளது.
www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டட அனுமதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.07.2024) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணைய தளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாகக் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
புரட்சிகரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது!
2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் வீடு கட்டப் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது எனது கவனத்துக்கு வந்தவுடனே, நிர்வாக நடைமுறைகளை எளிதாக்க உத்தரவிட்டேன். அதனடிப்படையில் உருவாகியுள்ள, பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு… pic.twitter.com/cO3xbBmn1x
— M.K.Stalin (@mkstalin) July 22, 2024
2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2,500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில், 3,500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும்.
சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் கடைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதைக் காட்டிலும், இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
இது தொடர்பாக, ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்க பட்டுள்ளது. தற்போது, குடியிருப்புக் கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பெறுவதற்காகப் பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடம் இருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடம் இருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடம் இருந்தும் பெறப்படுகிறது.
அவ்விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது).
கூராய்வுக்கட்டணம் (scrutiny fee) (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (I & A) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாகக் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
– லோகேஸ்வரி.வெ