கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் 4 தினங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். நீர் வரத்து சரியாகும் வரை தடை தொடரும் என அறிவித்துள்ளனர்.