“அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு..” எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை..!
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டின் இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பை பெற்றுத் தந்த இயக்கம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”. இட ஒதுக்கீடு கொள்கையை தமிழகத்தில் 100 சதவீதம் அமலுக்கு கொண்டு வந்து, பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் என அனைவரும் இன்றுவரை பயனடைந்து வருகின்றனர்.. அதற்கு முக்கியமான காரணம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
மேலும் இந்தத் தீர்ப்பினைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த சட்ட வல்லுநர்கள், முழு ஆதரவு அளித்த தமிழ்நாடு அருந்ததியர் சமுதாய மகாசபை, அருந்ததியர் சமூக மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..