டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்ட பணம்…பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்பதாக ராணிப்பேட்டை மாவட்ட டிஎஸ்பி கணேசனுக்கு தொடர்ந்து புகார் சென்றது.
குறிப்பாக சார்பதிவாளர் வின்சென்ட் அதிக அளவு லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உட்பட 7 பேர் கொண்ட போலீசார் திடீரென அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். .
அடுத்த சில நிமிடங்களில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மெயின் கேட்டை பூட்டினர். மேலும் சார்பதிவாளர் அலுவலக நுழைவாயில் கதவையும் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டனர்.
அந்த நேரத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தவர்கள் மற்றும் பத்திரப்பதிவு எழுத்தர்கள் , ஊழியர்கள் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்திருப்பது தெரிந்து கொண்டனர். பின்னர் சார் பதிவாளர் வின்சென்ட் பயன்படுத்தும் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் முழுவதுமாக சோதனை நடத்தி அதில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து உள்ளே எடுத்துச் சென்றனர்.
அதன் பின்னர் பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்களிடம் எவ்வளவு பணம் உள்ளது , எதற்காக வந்தீர்கள்? யாராவது லஞ்சம் கேட்கிறார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர்.
இந்த சோதனை 5 மணி நேரமாக நடந்தது. பின்னர் பத்திரப் பதிவுக்கு வந்திருந்தவர்களை போலீசார் ஒவ்வொருவராக வெளியே அனுப்பினர்.
தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களின் டிபன் பாக்ஸ், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 1,19,830 -ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் யாரிடம் எங்கிருந்து கைப்பற்றப்பட்டது என்ற விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தர மறுத்தனர் .
5 மணி நேரமாக பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்களையும் உள்ளே வைத்து பூட்டியதால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். . இதனால் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-பவானிகார்த்திக்