ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம்….
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகத்தின் சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை 3 மணி நேரத்தில் அடுத்தடுத்து 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் உணரப்பட்டுள்ள நிலையில், ஹோன்ஷு அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடலோரப் பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
கடற்கரைகளை சிறிய அளவிலான அலைகள் தாக்கு வருவதாகவும், ஒன்று முதல் 5 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக அலைகள் எழுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பல்வேறு கட்டடங்களும், சாலைகளும் நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ள நிலையில், உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
மேலும், சாலைகளிலும் கடல் நீர் புகுந்துள்ளதால் மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் வேகமாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 33,500 வீடுகளில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மேலும் மத்திய ஜப்பானில் தொடர்ச்சியான பெரிய பூகம்பங்களின் காரணமாக அந்நாட்டின் மையப்பகுதியைச் சுற்றி பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜப்பானில் இருக்கும் இந்தியர்களின் உதவிக்காக இந்திய தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.