தமிழ்நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது-வைகோ
தமிழ்நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார் , அப்போது பேசிய அவர் , இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும் ஒருமித்த கருத்துடனே பயணித்து வருவதாகவும் மத்திய பாரதிய ஜனதா அரசை இந்தக் கூட்டணி வெல்லும் என தான நம்புவதாக தெரிவித்தார்
தொடர்ந்து தென் மாநில தலைவர்கள் ஹிந்தி கத்துக்கொள்ள வேண்டும் என நிதிஷ்குமார் கூறியது குறித்து பேசிய வைகோ, முதலில் எந்த பிரச்சனையும் இதில் ஏற்படவில்லை எனவும் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க ஹிந்தியில் பேசியதாகவும் அப்போது தான் முதல் எதிர்ப்பு குரலை பதிவு செய்ததாகவும் அதன் பின்னர் டி ஆர் பாலு இதை எதிர்த்து கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வைகோ, கோவில்களையும், ஹிந்து மதத்தையும் காட்டி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவால் வாக்கு பெற முடியாது என்றார்
தொடர்ந்து பேசிய வைகோ , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் சந்திப்புக்குப் பின்னராவது ஆளுனர் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ் நாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் புயல், மழை பாதிப்புகளை சீரமைக்க தமிழ் நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்திய வைகோ, தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓர வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டினார்.