திருமணத்திற்கு பிறகு மீண்டும் காதல் கணவர் பஹத் பாசில் உடன் நஸ்ரியா நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரையுலகில் தென்னிந்திய திரைப்படங்கள் கோலோச்சி வருகின்றன. இந்த வரிசையில் திரைக்கதை, கதை, காட்சி அமைப்புகளால் ரசிகர்களை கவர்த்திழுத்து வந்த மலையாள சினிமா தற்போது வசூலிலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ‘ரோமாஞ்சம்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சாதனை படைத்து வருகிறது.
வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை 62 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. காமெடி ஹரர் பாணியில் உருவான இத்திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பஹத் பாசில் நடிக்க உள்ள அடுத்த படத்தை ஜித்து மாதவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளதாக பஹத் பாசில் சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார்.
பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா சிறிது காலம் திரையுலகை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் மீண்டும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள நஸ்ரியா, திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக கணவர் பஹத் பாசில் உடன் நடிக்க உள்ளது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.