ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.257 கோடி வசூலாகி சாதனை செய்துள்ளது.
இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை இயக்கியுள்ளார்.. இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று(மார்ச்.26) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.
‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையும் பெற்றாலும், படத்தின் பிரம்மாண்டத்தை பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் முதல்நாள் வசூல்குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்நாளில் மட்டும், மொத்தம் ரூ. 257.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.