ரீல்ஸ் மோகத்தால் 300 அடி பள்ளத்தில் விழுந்து இளம் பெண் பலி…!
மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா சுர்வசே. இவர் நேற்று (ஜூன் 17) சிவ்ராஜ் சஞ்சய் என்ற நண்பருடன் சூலிபஜன் பகுதியில் உள்ள தட் தாம் என்ற மலைக் கோயிலுக்கு காரில் சென்றுள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான அங்கு ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுக்க வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது.
எனவே, தான் கார் ஓட்டும் விதமாக ரீல்ஸ் வீடியோ எடுக்குமாறு உடன் வந்த நண்பர் சிவ்ராஜ்ஜிடம் ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஸ்வேதா காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டும் விதமாக போஸ் தரவே, வெளியே நின்று நண்பர் சிவ்ராஜ் வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார்.
அந்த நேரம் கார் ரிவர்ஸ் கீயரில் இருந்த நிலையில், இளம் பெண் ஸ்வேதா தவறுதலாக ஆசிலேட்டரை மிதக்க கார் வேகமாக பின்புறம் நோக்கி நகர்ந்து தடுப்பை தாண்டி 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
கார் இருந்த இடத்திற்கும் பள்ளத்திற்கும் சுமார் 50 அடி தொலைவு இருந்த போதிலும், கார் ஓட்டும் அனுபவம் இல்லாததால் ஸ்வேதா அதை கையாள தெரியாமல் இப்படி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
-பவானி கார்த்திக்