வேலூரில் ஓட்டல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழப்பு. இருவர் படுகாயம். ஓட்டல் மூடல். வடக்கு காவல் துறையினர் விசாரணை.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தனியார் (அருண்) உணவகத்தின் பின் பக்கம் சமையல் அறையாக உள்ள கட்டிடத்தின் சுவர் சேதம் அடைந்துள்ளதால் அதனை சீரமைக்கும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பெண், ஒரு ஆண் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் ஒரு பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில் மற்ற இருவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வேலூர் வடக்கு காவல் துறையினர் உணவகத்தை தற்காலிகமாக மூடி உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்கள் இன்று புதியதாக கூலி வேலைக்கு வந்ததால் அவர்களின் முகவரி குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விடிந்து விழுந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்றும் மழை காரணமாக பலவீனமாக இருந்ததால் இடிந்து விழுந்துள்ளதாகவும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.