ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! கண்ணீர் மல்க வைத்த கோரிக்கை..?
இலங்கை கடற்படையினர் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 22ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்ததை தொடர்ந்து மீண்டும் இன்று அதிகாலை 25 ராமேஸ்வரன் மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை, அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகாமில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுதலை செய்ய இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவர்களை விடுதலை செய்யகோரி குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் இன்று பாம்பன் பாலத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சக மீனவர்கள் கண்டன முழக்கங்களையும் எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராமேஸ்வரம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கடல் மணல் பரப்பில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கைது சம்பவங்களால் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருவதால், அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வருகின்றது.
-பவானி கார்த்திக்