10 ஆண்டுகளாக அரசு மதுபானத்தை பதுக்கி கள்ள சந்தையில் விற்று வந்த பெண் குற்றவாளி மனதை மாற்றி நடமாடும் சாப்பாடு கடை வைத்து கொடுத்த காவல்துறை”
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள் இவர் கடந்த 10 வருடங்களாக டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் காவல்துறையினர் அவரை தொடர்ச்சியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள்.
ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக இந்த பெண்மணி இதே வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்தது. இதனை சுதாரித்த காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் அந்தப் பெண்மணியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அந்த பெண்மணி எனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது என கூறியுள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு அரசு விடுமுறையிலும் இந்த பெண்மணி மதுபானங்களை விற்பது தொடர்பாக கைது செய்வது வழக்கமாக இருந்து வந்த சூழ்நிலையில், ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன் மற்றும் ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் ஆகியோர் பாலம்மாளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு அரசு விடுமுறையிலும் இது போன்ற வழக்குகளில் உங்களை கைது செய்வது எங்களுக்கே மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே உங்களுக்கு வேறு என்ன தொழில் உங்களால் செய்ய முடியும் என தொடர்ச்சியாக காவல்துறையினர் கேட்டிருந்தார்கள். அதற்கு இந்த தொழிலை தவிர நான் வேறு எதுவும் செய்ய மாட்டேன் என உறுதியாகக் கூறினார் பாலம்மாள்.
இதனை அடுத்து 10 நாட்களுக்கு மேலாக பாலம்மாளின் மனதை மாற்றி சாப்பாடு கடை வைத்து தருவதாக உதவி ஆணையரும் காவல் ஆய்வாளரும் தெரிவித்துள்ளனர். அதன்படி பாலம்மாள் மற்றும் அவரது மகள் பவானி ஆகியோர் ஒரு வகையில் ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து ஆய்வாளர் விஜய கிருஷ்ண ராஜ் அவர்களுடைய சொந்த செலவில் தள்ளுவண்டி மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் உபயோக பொருட்களை வழங்கி உள்ளனர்.
இந்த சம்பவம் பொறுத்தவரை குற்றவாளிகளை பிடித்தோமா ? கைது செய்தோமா ? நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தோமா என்று வழக்கமான காவல் துறையை போல இல்லாமல், குற்றவாளிகள் திரும்பி வேறு பிழைப்பும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காண்பித்துள்ளது ஐஸ் ஹவுஸ் காவல்துறை.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.