கடலுக்குள் ஓட்டா..? 16.95 கோடி பணம் பறிமுதல்..!!
சென்னையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகனப்பேரணி.. நடைபெற்றது. வாக்களிப்பதில் சுணக்கமாக இருக்கும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கண்டறிந்து அவர்களுக்கும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் 85% பேருக்கு பூத் ஸ்லிப் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று வகையான கண்காணிப்பு அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆணையாளருமான ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி. தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னை கோடம்பாக்கம் மண்டலம் அலுவலகம் அருகில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆணையாளருமான ஜெ. ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.ராதாகிருஷ்ணன், “தேர்தலையொட்டி 18 வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது 45 வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று 250 க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து தி.நகர், அசோக் நகர், அண்ணா நகர் பகுதிகளின் வழியாக மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொள்கின்றனர்.
கடலுக்குள் சென்று வாக்களித்தது, VJ & DJ க்கள் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்வது என பல வகைகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறோம்.
வாக்களிப்பதில் சுணக்கமாக இருக்கும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கண்டறிந்து அவர்களுக்கும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இன்றைய தினமும் தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சென்னையில் இதுவரை 39.2 லட்சம் வாக்காளர்களில் 85% பேருக்கு அதாவது 33.5 லட்சம் பேருக்கு பூத் ஸ்லிப் கொடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சோதனை மேற்கொண்டு சீல் வைத்து அனுப்பியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்களை சரிபார்த்து அனுப்பட்டுள்ளது.
தேர்தலன்று வாக்குச்சாவடி பணியாளர்கள் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என்பதை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வரும் 18ம் தேதி மதியத்திற்குள் உரிய அறிவுரைகள் வழங்கப்படும்.
299 துறை மேலாண்மை அதிகாரிகள் காவல் துறையினரோடு இணைந்து வாக்குப்பதிவு பொருட்களை சேமிப்பு அறைகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு பயன்டுத்திய வாக்குப்பெட்டிகள், இடையில் பழுதான வாக்குப்பெட்டிகள், பயன்படுத்தாத வாக்குப்பெட்டிகள் என தனித்தனியே வைக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று வகையான கண்காணிப்பு அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு உரிய அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது. வாகன தணிக்கையில் இதுவரை 15.77 கோடியும், காவல்துறை மூலமாக ரூ. 62.5 இலட்சம் மதிப்பிலான மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள், வருமானவரித்துறை மூலமாக ரூ16.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”, என்றார்.