சென்னை எழும்பூரில் உள்ள அம்பாசிட்டர் சோழா விடுதி அருகே தேடல் அமைப்பு தென் சென்னை மாவட்டம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள அம்பாசிட்டர் சோழா விடுதியில் நடைபெற்ற வெஸ்பா மற்றும் அப்ரில்லா ஆகிய இருசக்கர வாகன நிறுவனங்கள் நடத்திய “தி கிராண்ட் சென்னை ரைடு” என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, 12மணி நேர வேலை மசோதா குறித்து முதல்வரின் வழிகாட்டுதலின்படி நாளைய தினம் பொதுப்பணித்துறை அமைச்சர் , அமைச்சர் அன்பரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் இந்த பிரச்சனையை சமூகமாக அனைத்து தரப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் முடிவுகள் முதல்வரின் ஆலோசனைப்படி எடுக்கப்படும் என கூறியதோடு இது தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார் எனவும் உறுதி அளித்தார்.