வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்ததை கண்டித்து பேச பாமக உறுப்பினர்களை அனுமதிக்காததால் பாமக வெளிநடப்பு
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேரவையில் பேச பாமக உறுப்பினர்கள் முயற்சித்தனர்.
பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி.கே.மணி எழுந்து பேச தொடங்கிய நிலையில்,
கவன ஈர்ப்பு குறித்து இன்று காலையில் அனுமதி கேட்டுவிட்டு இன்றே பேச முயற்சிப்பது சரியல்ல என்றும் நாளை இதுகுறித்து பேச வாயப்பு தருவதாகவும் பேரவைத் தலைவர் கூறினார். ஆனால் தொடர்ந்து பாமக உறுப்பினர் ஜி்கே.மணி பேச முயற்சித்தார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் பாமக உறுப்பினர்கள் உள் நோக்கத்தோடு செயல்படுவதாகவும், அரசியல் செய்யும் இடம் பேரவை இல்லை என்றும் கூறினார்.
மேலும் அவை முன்னவர் துரைமுருகனும் பண்பட்டவரான ஜி.கே.மணி இவ்வாறு செய்யக் கூடாது என்று கூறினார்.
பின்னர் பாமக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி பேட்டி
வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால நீட்டிப்பை தமிழக அரசு நேற்று வழங்கியுள்ளது.
அரசின் நடவடிக்கை ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் அதிர்ச்சியும் , வேதனையும் அளிக்கிறது.
ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும் , குடிசையில் இருக்கும் மக்களாகவும் இருப்பவர்கள் வன்னியர்கள் தமிழகத்தில் 10, 12 ம் வகுப்பு மாணவர் தேர்ச்சியில் பின்தங்கிய 16 மாவட்டங்கள் வன்னியர்கள் வாழும் மாவட்டம்.
வன்னியர் ஒதுக்கீடு குறித்து பேரவையில் எங்களை பேச அனுமதிக்காததை கண்டித்தும் , வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு விழுக்காட்டை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு காலம் தாழ்த்த காரணம் என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை.
இது சமூக நீதி பிரச்சனை , அரசுக்கு அக்கறை இருந்தால் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சமூக நீதியை வலியுறுத்தும் பெரியார் வழிநடக்கும் அரசு உடனடியாக வழங்க வேண்டாமா..?
இது முக்கியமான பிரச்சனை, இன்றே விவாதிக்க அனுமதித்திருக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் குற்றம்சாட்டியவாறு நாங்கள் சட்டப்பேரவையில் அரசியல் செய்யவில்லை, சமூக நீதியைத்தான் கேட்டோம்.
இட ஒதுக்கீட்டைப் பெற 21 உயிர்த் தியாகத்தை செய்தோம். இந்தியாவில் இட ஒதுக்கீட்டுற்காக உயிர்த் தியாகம் செய்தது வன்னியர்கள் மட்டும்தான்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான காலக்கெடுவை நீட்டிருப்பதால் இந்த ஆண்டிலும் வன்னியர் இட ஒதுக்கீட்டில் மாணர்கள் சேர்க்கை பெறுவது கேள்விக்குள்ளாகி உள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை எங்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்று கூறினார்.