விருத்தாசலத்தில் மனைவியை கிண்டலடித்தவரை தட்டிக்கேட்ட கணவரை கஞ்சா போதையில் இருந்த சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணலூரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜய்(35) கூலி தொழிலாளி இவரது மனைவி சித்ரா தனது குடியிருப்பு அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் நவீன் (வயது 17) சித்ராவை கிண்டல் அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்ரா, வீட்டிலிருந்த தனது கணவர் விஜயிடம் கிண்டல் தொடர்பாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய், சிறுவனை அழைத்து தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென வீட்டிற்குள் சென்ற நவீன் கத்தி எடுத்து வந்து, விஜய் கழுத்தில் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பியோடிள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் விஜய் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய சிறுவனை தேடி வந்த நிலையில் அந்த சிறுவன் நவீன் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் கத்தியால் குத்திய நவீன் கஞ்சா போதையில் இருந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு போலீஸார் கஞ்சா வழக்கில் சிலரை பிடித்துச் சென்றபோது அப்போது சிறுவனும் அதில் இருப்பதை அறிந்து, அறிவுரை கூறி அவரை விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















