கூலிக்குக் கொலை செய்யும் கும்பல்..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு வைகோ இரங்கல்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அடையாளம் தெரியாத சில மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக தற்போது 8 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்
மிக இளம் வயதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங் எனவும் படுகொலைக்குக் காரணமான உண்மையான கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்
தமிழ்நாட்டில் கூலிக்குக் கொலை செய்யும் கும்பல் சர்வ சாதாரணமாக நடமாடுவதும் படுகொலைகளை நிகழ்த்தி வருவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி வருவதாகவும் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டின் நலனுக்காக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு அபாய அறிவிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கு காவல்துறையினர் இடமளிக்கக் கூடாது எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்
பொதுவாழ்வில் இன்னும் மக்கள் பணி ஆற்ற வேண்டிய பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் அவரது இயக்க தொண்டர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாகவும் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ