பொறியியல் கல்லூரியில் 470 போலி ஆசிரியர்கள்..! சிக்கியது எப்படி..?
தமிழகத்தில் மட்டும் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. அதில் 353 பேராசிரியர்கள் மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியில் அங்கீகாரம் பெறுவதற்காக சில ஆசிரியர்கள் பல கல்லூரியில் பணியாற்றி வருவதாக தன்னார்வத் தொண்டு நிறுவனமானது அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
அது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரின் விவரங்களை சேகரித்தோம். முன்னதாக ஆசிரியர்களின் ஆதார் எண் பெறப்பட்டு அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் தங்கள் ஆதார் எண்ணை மாற்றி கொடுத்துள்ளனர். இதனால் அந்த ஆசிரியர்கள் யார் என்பது பற்றிய தகவலை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பின் அவர்களின் பிறந்த தேதியை வைத்து ஆய்வு செய்தோம் ஆனால், ஒரே பேராசிரியர் 3, 4, 5 என பல கல்லூரிகளில் வேலை பார்ப்பது போல் பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். கடந்த 2023 -24ம் கல்வியாண்டில் மட்டும் 91 கல்லூரிகளில் பணியாற்றி வந்த 211 பேராசிரியர்கள் பெயர்கள் வெவ்வேறு கல்லூரியில் இருப்பது கண்டறியப்பட்டது.
2024- 25ம் ஆண்டிற்கான அங்கீகாரம் பெற விண்ணப்பித்த கல்லூரிகளில் 124 கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்களின் பெயர் பட்டியலில்., ஒரே பெயரைக் கொண்ட 470 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணியாற்றி யது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு 91 கல்லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு மேல் ஒரே பேராசிரியர் பெயர் பதிவு செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த ஆண்டில் இதுபோன்ற தவறுகள் இனி நடக்க கூடாது என்பதற்காக இதுபற்றிய தகவலை அளித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர்களின் விபரங்களை முறைகளாக அளித்தது குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழக உறுப்பினர் மற்றும் அரசு சார்பில் உறுப்பினர் என குழுவை அமைத்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் இனி வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிவது தடுக்க போவதாகவும்.., அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இனி எந்த கல்லூரியிலும் பணியாற்ற முடியாத அளவிற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தவறு செய்ய தூண்டுதலாக இருந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு துவங்கியுள்ளதாக பொது கலந்தாய்வுக்கு முன் விசாரணை நடத்தி முடிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, முறைகேடான கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும். நடப்பாண்டில் 91 கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர்களை முறைகேடாக கணக்கு காண்பித்தது கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ