சென்னையில் 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் 27 வயதான சையத். இவர் சின்னதிரையில் துணை நடிகராகவும், மாடலாகவும் இருந்துவருகிறார்.
இவரை பல பெண்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்புகொண்டு பேசி பழகி வந்துள்ளனர். அதில் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பண்ணை வீடுகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில், முகமது சையத் மீது மூன்று இளம் பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரில், எங்களோடு விளம்பர படங்களில் நடித்த மாடலிங் வாலிபர் ஒருவர் எங்களிடம் காதலிப்பதாக சொல்லி பழகி, பின்னர் திருமண ஆசைகாட்டி எங்களிடம் உடல் ரீதியாக உறவு வைத்து, பின்னர் லட்சக்கணக்கில் எங்களிடம் பணத்தையும் கறந்து விட்டு, கழற்றி விட்டு, விட்டார்.
எங்களிடம் உறவு வைத்தபோது, எங்களுக்கு தெரியாமல் ரகசியமாக எடுத்த படத்தை காட்டி, இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் பெற்றோருக்கு தெரிந்து விடும், என்று பயந்து விஷயத்தை வெளியில் சொல்லாமல் நாங்களும் மறைத்து விட்டோம்.
நாங்கள் 3 பேரும் தனியாக ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, எங்களை அந்த மாடல் வாலிபர் ஏமாற்றியதை தெரிந்து கொண்டோம். அந்த வாலிபரை பற்றி விசாரித்ததில் எங்களைப்போன்ற இன்னும் ஏராளமான பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து, அவர்களது கற்பை சூறையாடி இருப்பதும், தொடர்ந்து அவரது காம களியாட்டங்கள் நீடிப்பதும் தெரிய வந்தது.
பெண்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்தும் அந்த மனித மிருகத்தை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்க சபதம் போட்டு, நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.
எங்களது பெற்றோருக்கு தெரியாமல் நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின்படி, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் தனது தனிப்படையினர் மூலம் முகமது சயாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.
முகமது சயாத் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பலர் ஆன்லைன் மூலம் அவர் மீது புகார் அளித்து வருகின்றனர். இதனால் முகமது சயாத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.