பொதுத்தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தங்கள் மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை” (EXTRA CORPOREAL SHOCK WAVE LITHOTRIPSY TREATMENT CENTRE )மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தனியார் நிறுவன சிஎஸ்ஆர் நிதியின் கீழ் 2.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல்லை அகற்றும் நவீன சிறுநீரக கல் அகற்றும் இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு 125 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரக கல் அகற்றும் நவீன உபகரணம் KMC மருத்துவமனையில் இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
வருகிற ஜூன் 5ம் தேதி “கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை”
திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்க பட்டது.மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு ஆளுனருக்கு அழைப்பு விடுக்கபட்டது.ஆளுநர் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருவதாக ஒப்புக்கொண்டார்.
மருத்துவமனை திறப்பு விழா பற்றி மட்டுமே ஆளுநருடன் பேசினோம். சித்த மருத்துவர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசின் சார்பில் மத்திய சுகாதாரத் துறையிடம் 30 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைக்க கோரிக்கை வைத்திருந்தோம் 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
11 செவிலியர் பயிற்சி கல்லூரிக்கு மத்திய அரசு தலா 10 கோடி நிதி ஆதாரமாக கொடுத்துள்ளது.மருத்துவக்கல்லூரியிலேயே செவிலியர் பயிற்சி கல்லூரியும் தொடங்கப்படும்.ஒரு கல்லூரிக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு 1100 செவிலியர் பயிற்சி கல்லூரியில் பயில உள்ளனர்.
இந்த ஆண்டு அல்லது வரும் கல்வி ஆண்டு செவிலியர் பயிற்சி கல்லூரியில் சேர்க்கை நடைபெறும். எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் டெண்டர்கள் விடப்பட்டு டிசம்பர் மாத இறுதியில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 ஆண்டுகள் பணி நடைபெற்று 2028 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் பணிகள் நிறைவடையும்.பொதுத்தேர்வு முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள் 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெறலாம். குட்கா விற்பனை தொடர்பான புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.