கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கே.ஆர்.பி.டேம் அருகேயுள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகனும், முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சரண்யாவும் கடந்த ஒரு மாதத்திற்கு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 28 வயதான ஜெகன் டைட்ல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது காதலுக்கு சரண்யாவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் பெண்ணின் திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் அவரது தந்தை ஜெகனை அடிக்கடி கண்டித்து வந்ததாக தெரிகிறது. மேலும் ”என் மகளுக்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருந்தேன், உன் காதலை கைகூட விடமாட்டேன்” என எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஜெகன் – சரண்யா இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பெண்ணின் தகப்பனார் ஜெகனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ‘எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், எனது மகளை விட்டுவிடு’ என பேரம் பேசியுள்ளார். ஆனால் ஜெகன் பணத்தை விட எனக்கு காதல் மனைவி தான் முக்கியம் எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஜெகனை பெண்ணின் வீட்டார் சமரசம் பேச அழைத்துள்ளனர். இதனிடையே காவேரிப்பட்டினம் செல்லும் வழியில் மறைந்திருந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெகனை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்த பெண்ணின் தந்தை,“எனது மகளுக்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருந்தேன். நிச்சயதார்த்தம் செய்யவிருந்த நிலையில், ஜெகனை திருமணம் செய்து கொண்டார். இதனால் விரக்தி அடைந்ததால் ஜெகனை வெடிக்கொன்றேன்” என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பட்டப்பகலில் பெண்ணின் தந்தை காதலித்து திருமணம் செய்த இளைஞரை கொடூரமாக ஆணவக்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.