உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
வேலூர் மாவட்டத்தில் மாநகர திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தனது சொந்த செலவில் 2 ஆயிரத்து 72 பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதில் திமுக மாவட்ட செயலாளரும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணியை வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குருவாலப்பர் கோயில் கிராமம் அருகே புள்ளிமான் ஒன்று, சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், உயிரிழந்த ஆண் புள்ளி மானை உடல் அடக்கத்திற்கு கொண்டு சென்றனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வனவிலங்குகளுக்கு உரிய தண்ணீர் மற்றும் உணவு வசதி செய்து கொடுத்தால், இதுபோன்ற விபத்துகள் நேராது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டியை சேர்ந்த சிறுமியை, காளிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் கடந்த 3-ம் தேதி திருமணம் செய்துள்ளார். ஆனால் சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிகொண்டு கணவர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்ளில் பரவி வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் அளித்த நிலையில், மணமகன் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய கல்விக்கொள்கையின் மும்மொழி திட்டத்திதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, தமிழ்நாட்டிற்கு நிதி அளிக்க முடியும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை சுட்டிக்காட்டி, தர்மபுரி மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 200க்கும் மேற்பட்டோர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட வாள் சண்டை சாம்பியன் சங்கம் சார்பில், தாம்பரம் அருகே 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான வாள் சண்டை போட்டி நடைபெற்றது. இதில் 20 மாவட்டங்களை சேர்ந்த 200 ஆண் மற்றும் 200 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, வாள் சண்டை சாம்பியன் சங்கம் தலைவர் டில்லிபாபு, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கினார்.