கணவன் வீட்டின் முன்பு மனைவி தர்ணா போராட்டம் நடத்தியதில் மாமியார் மருந்து குடித்து அரசு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிகண்ணன் மகன் திருப்பதி( 23)என்பவர் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் நீலாம்பரி (22) என்பவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் திருப்பதி, நீலாம்பரி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து அவர்கள் பெண்ணின் வீட்டிலே இரண்டு மாதங்களாக வசித்து வந்தனர். இந்த நிலையில் திருப்பதி தனது வீட்டிற்கு பெற்றோர்களிடம் பேசி அழைத்து செல்வதாக கூறி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று உள்ளார். பின்னர் திருப்பதி ஒரு மாதம் ஆகியும் காணவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து நீலாம்பரி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் திடீரென நீலாம்பரி,திருப்பதி வீட்டின் முன்பு தனது கணவனுடன் சேர்த்து வைக்கும் படி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். அவமானம் தாங்கமால் திருப்பதியின் தாயார் பிரபாவதி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.
பின்னர் பிரபாவதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நீலாம்பரி கணவனை சேர்த்து வைக்கும் படி திருப்பதி வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.