ஐ.பி.எல் தொடரில் கோப்பையை ஆர்.சி.பி அணி வென்றதால் பெங்களுருவில் நடந்த பிரமாண்ட ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஆர்.சி.பி அணியின் மார்க்கெட்டிங் துறை தலைவர் நிகில் ஷோஷாலே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆர்.சி.பி அணியுடன் நிகில் பணியாற்றி வந்தார். பல துறைகளில் பணியாற்றி விட்டு தற்போது, மார்க்கெட்டிங் மற்றும் வருவாய் துறை தலைவராக உள்ளார். முன்னதாக, ஆர்.சி.பி அணியின் உரிமையாளரான டியாகோ இந்தியா நிறுவனத்தில் பணியாற்றினார். டியாகோ இந்தியா நிறுவனம்தான் விஜய் மல்லையாவின் யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உத்தரவையடுத்து, இன்று காலை 6.30 மணிக்கு மும்பை செல்ல கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு அவர் வந்த போது போலீசார் கைது செய்தனர். அதேபோல,பேரணிக்கு ஏற்பாடு செய்த டி.என்.ஏ என்டர்டிடெயின்ட்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த 3 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நிகில் விராட் கோலி, அனுஷ்காவுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். மைதானத்தில் அனுஷ்காவுடன் பாக்ஸ் அறையில் இருந்து கிரிக்கெட் பார்ப்பவர். விராட் கோலி இவரை, இன்ஸ்டாவில் பின்தொடரவும் செய்கிறார். அனுஷ்கா ஷர்மாவும் நிகிலின் மனைவி மாளவிகா நாயக்கும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஆர்.சி.பி விளையாடும் முக்கிய போட்டிகளை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளது. பெங்களுரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவாகரத்தையடுத்து, போலீஸ் துறையினர் மீது காங்கிரஸ் அரசு நடத்தும் தாக்குதல் என்றும் பாரதிய ஜனதா கட்சி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.