“வக்ஃபு வாரியம்..” உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!! தவெக தலைவர் விஜய் பதிவு…!!
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.
அது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை, ஆகஸ்ட் 8ம் தேதி மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்திருந்தார். இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளின் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற பல்வேறு மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதன் பின்னர் வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மறுவிசாரணை நடைபெறும் வரையில் புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் அவர்,
வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு. அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்.