உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் தனி தொகுப்பு திட்டத்திற்கு தேனி விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் பெரியகுளம், போடிநாயக்கனூர், தேனி, ஆண்டிபட்டி என சுமார் 6,000 ஹெக்டேருக்கும் அதிகமான அளவில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. கற்பூரவல்லி, நாடு, திசு வாழை, செவ்வாழை, நேந்திரன், நாலிப்பூவன், ரஸ்தாளி, ஜி9 உள்ளிட்ட வாழை ரகங்கள் சாகுபடி நடைபெறுகின்றன. இதில் மொத்த வாழை உற்பத்தி கடந்த 2020-21 ஆண்டில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இயல்பாகவே முல்லைப் பெரியாறு, வைகை, மஞ்சளாறு, வராக நதிக்கரை பகுதிகளில் விளையும் தேனி மாவட்ட வாழைக்கு தரம் அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு மற்றும் அகில இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் உலக சந்தைகளில் ஏற்றுமதியாகிறது.
அதன் முத்தாய்ப்பாக இன்றைய தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூபாய் 130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம் அறிவிப்பு தேனி மாவட்ட வாழை விவசாயிகளை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இதன் மூலம் வாழை உற்பத்தி திறனில் தமிழகத்தில் தேனி மாவட்டம் முன்னிலை வகிக்கும் சூழல் ஏற்படும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வாழையின் தரத்தை மேலும் உயர்த்துவதோடு, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தரம் உயர்த்தி உலகளாவியில் சந்தையில் தேனி மாவட்ட வாழை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.