மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்…!! தேசிய மகளிர் ஆணையம் விசாரணை…!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் குற்றவாளியான ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தனர்.
அதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை அமைத்து விசாரணை செய்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் குழு ஆணையத்தின் உறுப்பினர்கள் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.