மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மாவட்டத் தலைவருடன் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நிதியமைச்சர் கடந்த ஆக. 13-ஆம் தேதி மதுரை விமான நிலையம் சென்றார்.
அப்போது திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது. ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டபோது அவரின் காரை முற்றுகையிட்டு காலனியை வீசினர். இதனால் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பவத்திற்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை, புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரனிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடியோவில் ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதா, நமது கட்சியினர் எத்தனை பேர் உள்ளனர் என அண்ணாமலை மாவட்ட தலைவரிடம் கேட்க அதற்கு அவர் ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறுகிறார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.