சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட மாணவி கல்லீரல் பாதிப்புக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நகராட்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளியில் கடந்த, 6 ம் தேதி சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதில் 8 ம் வகுப்பு படிக்கும், நான்கு மாணவிகள் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டனர். இதையடுத்து நான்கு மாணவிகளும் மயக்கமடைந்தார்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அன்றைய தினமே கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மாணவியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 40 மாத்திரைகளை உட்கொண்ட ஒரு மாணவியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவி, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில், சேலம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாணவிக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.