என்.எல்.சி நிர்வாகம் கைப்பற்றிய விவாசய நிலத்தின் உரிமையாளர்கள் 88 பேருக்கு தலா நாற்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக என்எல்சி நிறுவனம் சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக மேல் வளையமாதேவி பகுதியில் அந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களில் கால்வாய் தோண்டும் பணியை கடந்த மாதத்தில் துவங்கியது. அந்த நிலங்களில் விவசாயிகள் பயிர்கள் செய்திருந்ததால் என்எல்சியின் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயி முருகன் என்பவர் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் தற்போது பணிகள் நடைபெறுவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடை செய்த பிறகு விவசாயிகள் நிலத்தை என்எல்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.