பழனி அருகே ஆற்றுபாலத்தில் கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவா (25). சிவா நேற்று மாலை முதல் வீட்டிற்கு செல்லாததால் உறவினர்கள் சிவாவை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் மானூர் அருகே உள்ள சண்முகநதி ஆற்று பாலத்தின் அடியில் இளைஞர் ஒருவர் முகத்தில் காயங்களுடன் உயிரிழந்திருப்பதாக பழனி கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்து பொதுமக்கள் உயிரிழந்து கிடப்பது மானூர் கிராமம் அண்ணாநகரை சேர்ந்த சிவா என்பதை உறுதி செய்தனர். ஆற்றுப்பாலத்தில் மது அருந்திய இளைஞர்கள் சிவாவை அடித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இளைஞர் சிவாவை கொலை செய்தது யார் ? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சிவா மீது திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.