கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், சதீசன், தீபு, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகினர்.
மேலும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி முருகவேல், டிஸ்பிகள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். இதில் தரப்பு வழக்கறிஞரான ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர்.
வழக்கு விசாரணை நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்ற நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சிபிசிஐடிக்கு தகவல் பெற வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கேட்கப்பட்டது.
இதனை ஏற்ற மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் வழக்கை பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.