தமிழகத்தில் தொடரும் கனமழை…!! ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இவை அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு இலங்கை தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்பதால் அடுத்த 4 நாட்களுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை திருவள்ளூர், நாகப்பட்டினம் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இவை புயலாக மாற வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இன்றும் நாளையும் 12 முதல் 20 செமீ வரை கனமழை பெய்யும் என்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீனவர்களின் எச்சரிக்கை பொறுத்தவரை குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடற்கரை பகுதி, தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூரைக்காற்று ஆனது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூரைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.