கொடைரோடு அருகே சடையாண்டிபுரம் பகுதியில் உள்ள சிறுமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பல ஏக்கர் பரப்பளவில் மூலிகை மற்றும் மரங்கள் எரிந்து நாசம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சடையாண்டிபுரம் பகுதியில் உள்ள சிறுமலை வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
சடையாண்டிபுரம், கிழக்குத்தோட்டம் பகுதி மேல் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மான்கள், காட்டெருமைகள், கேளையாடு, காட்டுப்பன்றி, சருகுமான் மற்றும் பல்வேறு வகையிலான பறவை இனங்கள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.
தற்போது கோடை காலமானதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக படிப்படியாக வனப்பகுதி முழுவதும் தீ எரிந்து கொண்டிருக்கிறது குறைந்தது 150 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் தீப்பறவியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வனப்பகுதியில் சில அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன. அவை அனைத்தும் தீ விபத்தில் கருகி உள்ளது.
மேலும் அந்த பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசித்து வந்த பல உயிரினங்கள் வேறு பகுதிக்கு இடம் மாறி உள்ளது. இந்த தீவிபத்து காரணமாக சிறுமலை பகுதி அடிவார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.