சிவகாசி அருகே ஊராம் பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று மாலை பட்டாசு ரகங்களுக்கு மருந்து செலுத்தும் அறையில் மூலப்பொருள்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்துக்குள்ளானது விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் அய்யம்மாள், இருளாயி, குமரேசன், சுந்தர்ராஜன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 4 பேரும் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து அய்யம்மாள் என்ற பெண்மணியும் மரணமடைந்தார். இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை பதிவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 3 லட்சம் ரூபாய் நிவாரணத்தையும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திரு. குமரேசன் த/பெ.சுப்புராஜ், திரு. சுந்தர்ராஜ் த/பெ.ராமகிருஷ்ணன் மற்றும் திருமதி. அய்யம்மாள் க/பெ. கருப்பையா ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி. இருளாயி க/பெ. சுந்தர்ராஜ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திருமதி. இருளாயி அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.