திமுக முப்பெரும் விழா..! 40 எம்.பி.க்கள் பங்கேற்பு..!
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவில், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 40 எம்.பி.க்களும் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றது. தற்போது, நடந்து முடிந்துள்ள 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு-புதுவையில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக அணி வென்று, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முழு காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது
விழாவில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக முதனமை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 40 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.
– லோகேஸ்வரி.வெ