குடும்ப வறுமை காரணமாக தாய்க்கு உதவ ஆன்லைன் வணிகத்தில் இறங்கிய மாணவி இன்ஸ்டா மோசடி கும்பலில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
சென்னை 7 கிணறு பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், சுபாஷ் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தேவையான தனியார் நிறுவன பொருட்களை 15 வருடங்களாக விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதுபோக, இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இளைய மகள் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு அதற்கான மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில், அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த சாந்தியின் முதல் மகள் மகாலட்சுமி தாய் படும் கஷ்டத்தையும், குடும்ப வறுமையையும் போக்க ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்துள்ளார்.
கல்லூரி சென்று வந்தது போக மீதமுள்ள நேரத்தில் ஆன்லைனில் வணிகம் செய்ய விரும்பி தொடர்ந்து அது குறித்த இணையதள பக்கங்களையும், லிங்க்குகளையும் இன்ஸ்டாகிராமில் தேடி வந்துள்ளார். அப்போது தான் இணையதளத்தில் ஆன்லைன் ட்ரேடிங் பற்றி அறிந்து கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் காண்பிக்கப்பட்ட சில விளம்பரங்களை பார்த்து ஒரு குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் என கூறி கும்பல் ஒரு லிங்க்கை அனுப்பியுள்ளது… அந்த லிங்க்கின் வழியே உள்ள சென்ற மாணவி, அதில் கேட்கும் விவரங்களை, கும்பலின் வழிகாட்டுதலோடு பூர்த்தி செய்து, முதலீடாக தாயின் வங்கி கணக்கில் இருந்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தையும் அனுப்பியுள்ளார்.
ஆனால் இன்ஸ்டாகிராம் மோசடி கும்பலோ மகாலட்சுமி அனுப்பிய பணத்தை பெற்றதோடு தொடர்பை துண்டித்துக்கொண்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கல்லூரி மாணவி, பல வழிகளில் அந்த மோசடி கும்பலை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தரும் படி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே குடும்பம் மிகவும் வறுமையான சூழ்நிலையில் கஷ்டப்பட்டு வந்த நிலையில், மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்ததை எண்ணி மாணவி மகாலட்சுமி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் வீட்டின் அறையில் மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன?, ஆன்லைன் வணிகத்தில் சிக்கி மாணவி பணத்தை இழந்தது எப்படி என விசாரித்து வருகின்றனர்.