படத்தில் நடித்ததற்கு எங்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை என பொம்மன் பெள்ளி தம்பதியினர் படத்தின் இயக்குனர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் வசிக்கும் யானை வளர்ப்பு தம்பதியின் வாழ்க்கை மையமாக வைத்து எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றது. சிக்யா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரித்த இந்த படத்தை கார்த்திகி போன்சால்வ்ஸ் என்ற இயக்கியிருந்தார். இந்த ஆவண படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி என்ற யானை வளர்ப்பு தம்பதி நடித்திருந்தனர். ஆஸ்கர் விருது வென்று பிறகு யானை வளர்ப்பு தம்பதியை பிரதமர், குடியரசு தலைவர், தமிழக முதல்வர் நேரில் பாராட்டினர். இந்த நிலையில், பொம்மன், பெல்லி இருவரும் படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸிடமும், தயாரிப்பு நிறுவனமான சிக்யா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு ₹ 2 கோடி கேட்டு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி போட்டி தொடக்க நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஆஸ்கா் விருது பெற்ற ‘தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்’ குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி பங்கேற்றனா். சென்னையில் தங்கியிருந்த பொம்மன் – பெல்லி தம்பதி இந்த விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளனர்.
ஆவணப்படம் எடுப்பதற்கு முன்பு புதிய வீடு கட்டி தருவதாகவும், குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் கூறி படத்தின் இயக்குனர் அணுகியதாகவும், ஆனால் படம் வெளிவந்து ஆஸ்கர் விருது வென்று பல கோடிகளை சம்பாதித்த பிறகு தங்களுக்கு அவர்கள் ஒன்றுமே கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அதற்காகத்தான் சட்டரீதியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் பொம்மன் பெள்ளி தெரிவித்துள்ளனர்.