தொட்டியம் அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதால் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை ஆசிரியர்கள், அதிகாரிகளை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரத்தில் பள்ளி மாணவன் சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவன் உயிரிழப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தோளுர் பட்டியை சேர்ந்த மெவுலீஸ்வரன் என்ற மாணவர் நேற்று பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த நிகழ்வின்போது பணியில் கவனக்குறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.