தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
இந்த இரண்டு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒரேநாளில், வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
















