தடையை மீறி போராட்டம்…!! சவுமியா அன்புமணி கைது..!!
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் குற்றவாளியான ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தனர்.
அதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை அமைத்து விசாரணை செய்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் குழு ஆணையத்தின் உறுப்பினர்கள் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாமக மகளிர் அணி சார்பில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் காவல்துறையினர் இந்த போராட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக சவுமியா அன்புமணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.