ஆள் இல்லா வீட்டில் சென்று 9 சவரன் நகை திருட்டு..!! வேலூரில் அதிர்ச்சி..!!
சிப்காட் அருகே வீட்டில் பூட்டை உடைத்து ஒன்பது சவரன் தங்க நகையை கொள்ளை அடித்த குற்றவாளியை போலீசாரால் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த சீக்கராஜபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் கடந்த சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் ஒன்பது சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின் நடந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட சிப்காட் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடியுள்ளனர்.
தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்பொழுது சீக்கராஜபுரம் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார் என்பவரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் மகேஸ்வரன் என்பவரின் வீட்டில் கதவை உடைத்து கொள்ளையடித்தது, நான் தான் என போலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குற்றவாளியிடம் இருந்து கொள்ளையடித்த 9 சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்ததோடு, இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் அவன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.