தருமபுரம் ஆதீனத்தினர் வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளி..!!
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனகர்த்தர் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி கடந்த மாதம் 25ம்தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ், பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன், செம்பனார்கோவில் திமுக ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் குடியரசு, விக்னஷ், வினோத், ஶ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்து மயிலாடுதுறை கிளைசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கில் தொடர்புடைய எஞ்சிய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மயிலாடுதுறை குழந்தைகள் தடுப்பு குற்றபுலனாய்வு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் 8 பேர் அடங்கிய குழுவினர் மகாராஸ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறைக்கு அழைத்து வந்தனர். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாததால் திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். ஆஜராவதற்கு முன் தன்மீது போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளதாக அகோரம் குற்றம்சாட்டினார். இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி கனிமொழி மார்ச் 28 ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் அகோரத்தை மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர்.
பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை பார்ப்பதற்காக வந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து பின்னர் விடுவித்தனர்.